|
இலங்கை. காத்தகுடி. மக்பூல் |
முஸ்லிம் சமூகத்தை உற்று
நோக்கினால் அபிவிருத்தி, முன்னேற்றம், கல்வி
விழிப்புணர்ச்சி என்று அனைத்துத்துறைகளிலும்
செயல் இழந்து தவிப்பதை யாராலும் மறுக்க
முடியாது.
இந்தப்பின்னடைவிற்கும், கீழ்மட்டத்தை நோக்கிய
நகர்வுக்கும் காரணம் என்ன என்பதை நாம்
சிந்திப்பதில்லை.
இதற்கு இந்த தலைமுறையிரை குற்றம் சொல்ல
முடியாது. கடந்து சென்ற தலைமுறையினர் விட்ட
தவறுகளே இன்றைய பரிதாப நிலைக்குக் காரணம்.
குறிப்பாக சொல்லப் போனால் அதிகமான
பெற்றோர்கள் குழந்தைகளை சிந்திக்கும் செயல்
திறன் மிக்கவர்களாக வளர்க்கத் தவறி
விட்டார்கள்.
எதிர்கால சந்ததியினர் நம்மையும் குறைக்கூற
கூடாது என்றால் நாம் சில தீர்மானங்களை,
கொள்கைகளை, திட்டங்களை வகுப்பதோடு
செயல்படுத்தவும் வேண்டும்.
அல்லாஹ்வின் அருட்கொடைகளில் குழந்தைச்செல்வம்
மிக முக்கியமானது, இன்று குழந்தைகள் இல்லாமல்
எத்தனையோ தம்பதிகள் கண்ணீரோடும் கவலையோடும்
பொறுமையோடும் அல்லாஹ் நாடினால் பிள்ளையினை
தருவான் என்று காலம் கடத்தி வருவதை நாம்
காண்கிறோம்.
அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கும் இப்பெரும்
பாக்கியமான நம் குழந்தைச் செல்வங்களை
திறமையாய் முன்மாதிரியாய் எடுத்துக்காட்டாய்
ஏன் வளர்க்கக்கூடாது..?
சீர்திருத்தங்களைப்பற்றி சிந்திக்கக்கூடாதா..?
செயல் படுத்த இன்னும் எதற்கு தாமதம்..?
பெற்றோர்களே.. நம் குழந்தைகளை சுயமாய்
சிந்திக்கும் திட்டங்களை வகுக்கும்
செயலாற்றும் சமூகமாய் நாம் கண்டிப்பாக
உருவாக்க வேண்டும்.
இதற்கு அடிப்படையாய் ஆரோக்கியம், கல்வி,
நற்சூழ்நிலை குழந்தைகளை சென்று அடைய வேண்டும்.
ஆரோக்கியம் : சிசுக்களின் முதலாவதும்,
மிகப்பிரதானமான உணவாக இருப்பது தாய்ப்பால்
தான். நாகரிகங்களை விரும்பும் சில தாய்மார்கள்
தன் குழந்தைகளுக்கு தாய்ப்பால்
கொடுப்பதில்லை. கேட்டால் கவர்ச்சி போய்
விடும் என்பது போன்ற பல காரணங்களை
சொல்வார்கள். தாய்ப்பால் இறைவன் கொடுத்த ஒரு
அருட் தான். அதனை பிள்ளைகளுக்கு கொடுக்காமல்
இருந்தால் பல நோய்களை தாய்மார்கள்
அடைவார்கள். தாய்ப்பாலை பிள்ளைகளுக்கு
கொடுத்தால் பிள்ளைகளும் சரியே, தாயும் சரியே
பல நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்
என்பதும் உண்மை தான். தாய்ப்பாலை விட அதிகம்
நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது எதுவுமே
கிடையாது. தாய்மார்கள் பிள்ளைகளுக்கு
கொடுக்கும் தாய்ப்பாலை பற்றி அல்லாஹ்
திருக்குர்ஆனில் குறிப்பிடும் போது,
தங்களுடைய
குழந்தைகளுக்கு தம் மனைவிகளைக் கொண்டே பால்
ஊட்டுவதைப் பூர்த்தியாக்க விரும்புகிறவருக்காக
தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு (அவை
பிறந்ததிலிருந்து) இரண்டு ஆண்டுகள் வரை
பூரணமாகப் பாலூட்டுவார்கள்.(அல்குர்ஆன்
2:233)
தாய்ப்பால் பிள்ளைக்கும் தாய்க்குமிடையில்
அன்பையும், பாசப்பிணைப்பையும், நெருக்கமான
உறவையும், நேசத்தையும் அதிகப்படுத்தும்
அச்சாணியாய் அமைவது என்பதை தாய்மார்களே..
மறந்திட வேண்டாம்.
மேலும், தம் பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்தான
சிறந்த உணவுகளும், பழ வகைகளும் கொடுக்க
வேண்டும். ஒவ்வொரு கால நிலைகளிலும்
கிடைக்;கும் பற்பழங்கள் உடல் சமநிலை பேண
உதவும்.
மனிதனுக்கு மனிதன் உடல் நிலையில் மாறுபாடு
உண்டு. எனவே எந்த எந்த உணவு தம் பிள்ளையின்
உடல் நிலைக்கு உகந்தது, எந்த உணவுகள் ஒவ்வாமை
(அஜீரணிக்கக்கூடியது) என்பதையும்,
பிள்ளைகளுக்கு பிடித்தமான உணவுகள் எது
என்பதையும் பெற்றோரே அறிவார்கள். அதிலும்
தந்தைமார்களை விட தாய்மார்களே நன்கறிவார்கள்.
எனவே நாம் சமைக்கும் உணவானாலும், கடைகளில்
வாங்கும் உணவானாலும் தன் குழந்தைக்கு
எந்தளவுக்கு ஊட்டத்தையும், அதிக சக்தியையும்
வழங்கும் என்பதினை அறிய வேண்டிய கட்டாயத்தில்
ஒவ்வொரு பெற்றோரும் இருக்க வேண்டும். உடல்
வளர்ச்சி, மூளை வளர்ச்சிக்கு எந்தளவுக்கு
பங்களிப்பு செய்யும் என்பதையும் பெற்றோர்கள்
தெளிவாய் அறிந்திருப்பது அவசியம்.
இன்று, நாம் பார்க்கிறோம் சில மாணவர்கள்
மாதத்தில் பாதி நாட்கள் பாடசாலைக்கு
வருவதில்லை. காரணம் தொடர்ந்து நோய் வருவதே..
சில நேரம் கெட்டித்தனமாய், ஆர்வமாய் படிக்கும்
மாணவர்களும் நோயால் பாதிக்கப்படுவது தான்
சோகம். இதற்கு அடிப்படைக்காரணம்
குழந்தைப்பருவத்தில் கொடுக்கப்பட்ட உணவுகளே.
குழந்தைகளில் உணவு விசயத்தில் அதிக கவனம்
செலுத்துங்கள் பெற்றோர்களே.. ஏனெனில் நல்ல
ஆரோக்கியமான பிள்ளைகளால் தான் நன்கு
சிந்திக்கவும், செயல்படவும், கிரகிக்கவும்
செயல்படவும் முடியும்.
கல்வி : ஒரு குழந்தையின் முதலாவது
பள்ளிக்கூடம் வீடு தான். அங்கு பெற்றோரும்,
வீட்டிலுள்ள அனைவரும் ஆசிரியர்களே. வளரும்
பயிர் முளையிலே தெரியும்.. அந்த வித்தை,
முளையை இனம் கண்டு செழித்து வளர உரமாய்..
உந்து சக்தியாய்.. இருப்பவர்களே இந்த வீட்டு
ஆசிரியர்கள்.
கல்வியில் சிறந்த கல்வி நல்லொழுக்கம் தான்.
முதியோரை மதித்தல், பகிரிந்தளித்தல்,
பொறுமை, நீதியாய் நடத்தல், நல்ல வார்த்தைகளை
மட்டும் பேசுதல் இது போன்ற நல்ல
பழக்கங்களையும், பொறாமை, கோள், அவதூறு,
மோசடி செய்தல், திருடுதல் போன்ற தீய
செயல்களை தவிர்ந்து நடக்கவும் பிள்ளைகளுக்கு
சொல்லிக்கொடுக்க வேண்டும்.
எல்லாத்தீய பழக்கங்களுக்கும் முதுகெலும்பாய்
உள்ளது பொய் தான். எனவே தான்
முஹம்மது நபி (ஸல்)
அவர்கள், விளையாட்டுகாகவேணும் பொய்யை விட்டு
விடுகிறவனுக்கு சுவர்க்கத்தில் ஒரு மாளிகை
எழுப்பப்படுவதற்கு நான் பொறுப்பேற்கிறேன் என
நவின்றுள்ளார்கள்.ஆதாரம் : அபூ தாவூத்
மேலும் கூறியுள்ளார்கள்..
யாரேனும் ஒரு
குழந்தையிடம்.. வா.. இதோ வாங்கிக்கொள்..
என்று கூறி பிறகு அதைக் கொடுக்கவில்லையெனில்
அதுவும் பொய்யே ஆகும்.
அறிவிப்பாளார் : அபூ ஹுரைரா (ரலி) நூல்
- அஹ்மத்
பிள்ளைகளை பொய் பேசுவதிலிருந்து
பாதுகாத்துக்கொள்ளுங்கள். பொய் பேசினால்
அதன் அர்த்தம் தவறோ, அநீதியோ, துரோகமோ
செய்கிறார்கள் என்பதே பொருள்.
இஸ்லாம் நல்ல பழக்க வழக்கங்களை நமக்கு
தெளிவாய் கற்றுத்தந்து இருக்கிறது. நகம்
வெட்டுதல், பல்துலக்குதல், மலஜலம் கழித்தல்,
குளித்தல் என முழு வாழ்க்கைத்திட்டமாய் பரந்து
விரிந்திருக்கிறது. ஒவ்வொரு செயலுக்கும்
துஆக்களையும் கற்றுத்தர தவறவில்லை. நம்
பிள்ளைகளுக்கும் சுன்னத்தான துஆக்களை
கண்டிப்பாய் மனனம் செய்ய முயற்சிக்க வேண்டும்.
பெற்றோர்களும் துஆக்களை படித்து
வைத்துக்கொண்டு அவர்களுக்கு ஒவ்வொரு நாளும்
சொல்லிக்கொடுத்து கொண்டே இருக்க
முயற்சியினை மேற்கொள்ள வேண்டும்.
தூக்கத்திலிருந்து விழித்துக் கூறப்படும் துஆ
அல்ஹம்து
லில்லாஹில்லதீ அஹ்யானா பஃத மா அமாதனா வஇலைஹின்
னுஷுர்.
பொருள் : நம்மை மரணிக்கச் செய்த பின்
நமக்கு உயர் கொடுத்தவனாகிய அல்லாஹ்விற்கே
புகழ் அனைத்தும் உரித்தாகுக..!
ஃபத்ஹுடன் புகாரீ. பாகம் 11. பக்கம்
113. முஸ்லிம். பாகம் 4. பக்கம் 2083.
கழிவறையில் நுழையும் போது துஆ
அல்லாஹும்ம இன்னீ
அஊது பிக மினல் குப்ஸி வல் கபாயிஸி
பொருள் : யா அல்லாஹ்.. ஆண் ஷைத்தான் பெண்
ஷைத்தான்களின் தீமையிலிருந்து உன்னைக் கொண்டு
நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்.
கழிவறையிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ
குஃப்ரானக.
பொருள்: உன்னிடம் பாவம் பொருத்தருள
வேண்டுகிறேன்.
நூல்கள் : திர்மிதீ. அபூதாவூது. இப்னுமாஜா
வீட்டிலிருந்து புறப்படும் போது
பிஸ்மில்லாஹி
தவக்கல்து அலல்லாஹி வலா ஹவ்ல லா குவ்வத இல்லா
பில்லாஹி.
பொருள்: அல்லாஹ்வின் பெயரால் அல்லாஹ்வின்
மீது நம்பிக்கை வைத்து விட்டேன். மேலும்
அல்லாஹ்வைக்கொண்டல்லாது (பாவத்திலிருந்து
திரும்புதலும், நன்மையானவற்றைச் செய்வதற்கு)
சக்தியுமில்லை.
திர்மிதீ 5,490
அபூதாவூது 4,325
வீட்டினுள் நுழையும் போது துஆ
பிஸ்மில்லாஹி
வலஜ்னா, வ பிஸ்மிலாஹி கரஜ்னத, வஅலா ரப்பினா
தவக்கல்னா.
பொருள் : அல்லாஹ்வின் பெயரால்
நுழைந்தோம். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே
புறப்படுவோம். நம்முடைய இரட்சகனின் மீது
(நம்முடைய காரியங்களை முழுமையாக ஒப்படைத்து)
நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம்.
இது போல் இன்னும் பல துஆக்கள் உள்ளன.
அவற்றில் ஒவ்வொன்றையும் பெற்றோர்கள் முதலில்
தெரிந்துக்கொண்டு அதனை சிறார்களுக்கு சொல்லி
பழக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள
துஆக்கள் சில உதாரணம் தான்.
சில பெற்றோர்கள் நாகரீகம் என்ற பெயரில்
மோசமான மற்றும் இஸ்லாம் அங்கீகரிக்காத தீய
பழக்க வழக்கங்களை தன் பிள்ளைகளுக்கு அவர்கள்
பழக்குகிறார்கள். அல்லது அவர்கள் இத்தகைய
செயல்களை செய்வதை விட்டும் தடை செய்வதும்
இல்லை. திக்ரு மற்றும் துஆக்களை
கற்றுக்கொடுப்பதை விட்டும் அவர்கள் பராமுகமாக
இருப்பதால் பிள்ளைகள் தொலைக்காட்சியில்
மற்றும் திரைப்படங்களில் நடிகர்கள் மற்றும்
நடிகைகள் என்ன பஞ்ச் வசனங்களை சொல்கிறார்களோ
அதனை அவர்களும் சொல்கிறார்கள். மற்றும்
அந்தந்த கால கட்டத்திற்கு ஏற்ப என்ன திரைப்பட
பாடல் பிடித்து இருக்கிறோதோ அந்த
திரைப்படத்தினை பாடல் வரிகளை ஒன்று விடாமலும்
மற்றும் மறக்காமலும் அடி பிறழாமல் பாடி
வருகிறார்கள், விருந்தினர்கள் வீட்டிற்கு
வந்தால் என் மகன்.. இந்த பாட்டை நல்ல
பாடுவான்.. அந்த பாட்டை நல்லா.. பாடுவான்
என்று பெற்றோர்கள் பிள்ளைகளை மிஞ்சுவார்கள்.
கெட்ட சினிமா பாடல்களினால் சிறார்கள் உடல்,
மனம், சிந்தனையானது பிழையான மற்றும் தவறான
எண்ணங்களை தேடிக்கொள்கிறது. சில பெற்றோர்கள்
சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு
அடிமைப்பட்டு விடுகிறார்கள். இதனால்
அவர்களுடைய பிள்ளைகளும் தாய் தகப்பன் என்ன
வழியோ அந்த வழியினை பின் தொடர்கிறார்கள்.
பிள்ளைகளுக்கு தெரியாது.. நல்லது எது..
கெட்டது எது என்று. நாம் தான் அவர்களை நல்
வழிப்படுத்தி ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வர வேண்டும். தொலைக்காட்சி பார்ப்பது
தப்பில்லை, ஆனால்.. அதில் உள்ள தரமான
நிகழ்ச்சிகளை கல்விக்கும் எதிர்காலத்துக்கும்
உதவக்கூடிய நிகழ்ச்சிகளை இனங்கண்டு அவைகளின்
நேரங்களை அட்டவணைப்படுத்தி குறிப்பிட்ட
நேரங்களை ஒதுக்கி தொலைக்காட்சி பார்க்க
அனுமதிப்பது குற்றமில்லை. பிள்ளைகளின்
பெறுமதியான ரேநங்களையும், பாடசாலையின் வீட்டு
வேலைகளையும், உடல் ஆராக்கியங்களை தரக்கூடிய
விளையாட்டுக்களையும் சிதைப்பது இந்த
தொல்லைக்காட்சி தான். தொலைக்காட்சியில்
வீணடிக்கும் நேரங்களை திருக்குர்ஆனை ஓதவும்,
மனம் செய்யவும் பழங்குங்கள். எனவே நம்
பிள்ளைகளுக்கு தினமும் நல்ல பத்திரிகைகள்
வாசிக்கும் பழக்கத்தையும் மேற்கொள்ள
வேண்டும். நல்ல புத்தகங்களை வாசிக்கும் மனிதன்
முழு மனிதனாவான். அத்துடன்
கைப்பணிப்பொருட்கள் தயாரிக்கும்
பயிற்சியையும் கற்றுக்கொடுங்கள் இதனால் புதிய
கண்டு பிடிப்புகளுக்கும், சுயமாய்
சிந்திக்கும் ஆற்றலுக்கும் இப்படியான
முயற்சிகள் வித்திடுவதோடு சுய தொழில்களை
கற்றுக்கொள்ளவும் அடிப்படையாய் அமையும்.
தற்போதைய கல்வித்திட்டங்களை
எடுத்துப்பார்த்தால் நம் பெற்றோருக்கும்
நமக்கும் உள்ள கல்வித்திட்டங்களுக்கு இடையில்
சிறிய வித்தியாசம் உண்டு. நமக்கும் நம்
பிள்ளைகளின் கல்வித்திட்டங்களுக்கு இடையில்
மிகப்பெரிய மாற்றத்தையும் வளர்ச்சியையும்
காணலாம். தற்போதைய கல்வித்திட்டங்களில் புதிய
கண்டுபிடிப்புகள், அதியுயர் தொழில் நுட்பம்,
நவீன விஞ்ஞானம், மருத்துவம் என அதிசயத்தக்க
பிரமிக்கக்கூடிய பல பரிமானங்களை அடைந்துள்ளது.
தற்போது நாற்பது அல்லது நாற்பதைந்து
வயதிலிருக்கும் ஒருவர் 15 அல்லது 20 வயது
பூர்த்தி அடைந்தப்பின்னர் தான் கணிணியின்
அறிமுகத்தையும் அறிவையும் பெற்றிருப்பார். நம்
பிள்ளைகள் அவர்கள் பிறக்கும் போதே நவீன
தொழில் நுட்ப சாதனங்களை அறிந்தவர்களாக 20
அல்லது 25 வருடங்கள் முன்னோக்கியவர்களாக
பிறக்கிறார்கள். எனவே நம் பிள்ளைகள் நாம்
எதிர் கொண்ட சவால்களை விட இவர்களுக்கு நிறைய
சவால்களும் போட்டிகளும் பொறுப்புகளும்
மிகவும் அதிகம்.
இவ்வுலகத்தின் அதி வேக முன்னேற்றங்களுக்கு
முகம் கொடுக்கக்கூடியவர்களாக பிள்ளைகளை
குழந்தைப்பருவத்திலிருந்தே தயார் படுத்த
வேண்டும். எதிர் கால திட்டங்களோடு
வளர்க்கப்படும் குழந்தைகள் மற்ற குழந்தைகளை
விட அறிவாற்றிலும் ஆளுமையிலும்
நல்லொழுக்கங்களிலும சிறந்து
விளங்குகிறார்கள். எனவே பிள்ளைகளின் கல்வி
விடயத்தில் பெற்றோர்கள் பொறுப்புடனும், தூர
நோக்குடனும் திpட்டமிட்டு செயல்பட வேண்டும்..
ஒரு பிள்ளை கெட்டித்தனமாக நல்ல பிள்ளையாகவும்
கெட்ட பழக்கமுள்ள பிள்ளையாகவும் மாறுவது
சூழலால்தான். நல்ல சூழலிலுள்ள நல்ல
பிள்ளைகளுடனேயே நம் பிள்ளைகளையும் விளையாட விட
வேண்டும். சில பெற்றோர்கள் பிள்ளைகளை விளையாட
விடாமல் எந்த நேரமும் படி படி என்று
வற்புறுத்துகிறார்கள். இதனால் மன உளைச்சலும்,
உடல் சோர்வும், சோம்பேறித்தனமும் தான்
உண்டாகும். குறிப்பிட்ட நேரம் பிள்ளைகளை
சுதந்திரமாக தாங்களின் கண்காணிப்பில் விளையாட
விட வேண்டும். விளையாட்டுகளிலும் நம்முடைய
பிள்ளைகளுக்கே தலைமைத்துவ பொறுப்புகளைக்
கொடுங்கள். இதனால் பிள்ளையின் ஆளுமையும்,
செயல் திறனும், சிந்தனை சக்தியும்
அதிகரிக்கும். நீங்களும் அவர்களின்
செயல்பாடுகளை உன்னிப்பாக அவதானித்து வந்தால்
அவர்களைப்பற்றி தெளிவாய், முழுமையாய் அறிந்து
கொள்ள உதவியாக இருக்கும். மேலும், வீட்டுக்கு
கொண்டு வரும் புதிய பொருட்களைப்பற்றி ஏது..?
எங்கிருந்து எப்படி வந்தது என்பதனை பற்றி
விசாரிக்க வேண்டும். அதே நேரம் நம்
வீட்டிலிருந்து என்னென்ன பொருட்களை வெளியே
கொண்டு போகிறார்கள் என்பதையும் அவதானித்து
கொள்ளுங்கள். அவர்களின் திறமைகளை உடனுக்குடன்
மனம் திறந்து பாராட்டுகள் புகழுங்கள்
முடிந்தால் சின்ன சின்ன பரிசு பொருட்களை
கொடுத்து மகிழ்வித்து ஊக்கப்படுத்துங்கள்.
நீங்கள் வாக்களித்தால் கண்டிப்பாக
நிறைவேற்றுங்கள். எக்காரணத்திற்காகவும்
ஏமாற்றாதீர்கள். அவர்களின் தவறுகளை அன்போடும்
பக்குவமாகவும் எடுத்துச் சொல்ல வேண்டும்.
தவறுகள் அவர்கள் தான் செய்தார்கள் என்று
கற்பனை பண்ணி அவர்கள் மீது வீண்பழி சுமத்தி
குற்றக்காரனாக சண்டைக்காரனாக ஆக்கி
விடாதீர்கள். அதனால் தீய சிந்தனையும்
மற்றவர்களை மதிக்காத குணங்களும் வெறுப்பும்
விரக்தியும் உண்டாக காரணமாகி விடும். சின்ன
சின்ன தவறுகளுக்கெல்லாம் ஏசுவதும் அடிப்பதும்
பல பேர் முன் அவமானப்படுத்துவதும் சில
பெற்றோர்கள் சர்வசாதாரணம் என நினைத்து
அவர்களை புண்படுத்துகிறார்கள். இப்படியான
நடவடிக்கைகளை முற்றாக தவிர்த்துக் கொள்ள
வேண்டும்.
கண்டிப்பு இருக்க வேண்டும்.. தண்டிக்க தான்
வேண்டும்.. ஆனால் அதனால் பிள்ளைகளின் மனங்கள்
பாதிக்காத விதத்தில் செய்த தவறை
தெளிவுப்படுத்தி அதனை ஏற்க செய்து உணர்ந்து
திருந்தும் வகையில் தண்டிக்க வேண்டும். சில
நேரங்களில் பெற்றோர்களிடம் அடி
வாங்குவார்கள். என்ன காரணத்திற்காக அடி
வாங்கினோம் என்ற உண்மை அவர்களுக்கு
தெரியாமலிருக்கும். அடிக்கும் விசயத்தில்
நிதானமும் பொறுமையும் அவசியம் இல்லாவிட்டால்
கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக தண்டிக்க
போய் எதிர் பாராத தாக்கங்களும்,
மாற்றங்களும், விபரீதங்களும் பிள்ளையின்
பிஞ்சு நெஞ்சத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும்.
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை எனவே
பிள்ளைகளின் உள்ளங்களில் நல்ல கருத்துகளை,
தூய்மையான எண்ணங்களை, பரந்த மனப்பான்மைகளை
விதைத்து விடுங்கள். நல்ல பழக்க வழக்கங்களை
நல்லொழுக்கங்களை வீட்டில் கற்றுக்கொடுங்கள்.
இஸ்லாத்தை மனதின் ஆழத்தில் பதிந்து விடுங்கள்.
கல்வி, விளையாட்டு என சகல துறைகளிலும்
முன்மாதிரியாய் எடுத்துக்காட்டாய் திகழ
உங்களின் வாழ்க்கையினை அர்ப்பணியுங்கள்.
இன்றைய சிறுவர்களே.. நாளைய தலைவர்கள்.. எதிர்
கால சந்ததிகளின் சுகமான, சுபீட்ஷமான
சந்தோஷமான, சுதந்திரமான வாழ்க்கைக்காக இன்றே
நம் பிள்ளைச் செல்வங்களை தயார் படுத்துவோம்.
அல்லாஹ் நம் முயற்சிகளை இலகுப்படுத்தி மகத்தான
வெற்றியும் தருவானாக. ஆமீன்..
பகல் கனவுகளை
கலைத்து விடு..
ஆசைகள்
நிராசைகளாக
நிராகரிக்கப்படும் முன்
மாற்றங்கள்
மலராத வரை
முன்னேற்றங்களை
எதிர்பார்க்க முடியாது..
|