இஸ்லாம்
சந்தித்து வரும் இடுக்கண்கள், இஸ்லாம்
எதிர் கொண்ட சவால்கள், அதற்கான தீர்வுகள்
இத்யாதிகள் அனைத்தும் உலகம் அறிந்ததுதான்.
இஸ்லாம் மார்க்கத்தின் இறுதி இறைத்தூதர்
முஹம்மது (ஸல்) அவர்கள் மரணம் அடைந்த
சம்பவம், வரலாற்றுக் குறிப்பேடுகளில்
மிகத் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் இயற்கையாக
மரணமடைந்தார்கள் என்பதில் இரண்டு
கருத்துகள் இல்லை. ஆயினும், நபி (ஸல்)
அவர்கள் விஷம் வைத்த உணவை உண்டதால்
மரணமடைந்தார்கள் என வரலாற்றில் இல்லாத -
சம்பந்தமே இல்லாத செய்தி பரப்பப்படுகிறது.
எனவே நபி (ஸல்) அவர்களின் இயற்கை மரணம்
பற்றி இங்கு காண்போம்.
ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நபிமார்களைத்
தேர்ந்தெடுத்து அவர்கள் வழியாக மனித
சமுதாயத்துக்கு இஸ்லாம் எனும் இறை
மார்க்கத்தின் போதனைகைளை வழங்கினான்
இறைவன். நபிமார்கள் போதித்த
நல்லுபதேசங்கள் புறக்கணிக்கப்பட்டதோடு,
சில நபிமார்கள் கொலையும்
செய்யப்பட்டார்கள். (பார்க்க:
திருக்குர்ஆன் வசனங்கள், 002:061,091.
003:021,112,181. 004:155. 005:070)
நபிமார்களின் அறவுரைகளைப்
புறக்கணித்ததும், போதித்த நபிமார்களைக்
கொலை செய்ததும் ஏன்? என்றால் மனித மனம்
விரும்பாததை போதித்தாலேயே நபிமார்கள்
கொலை செய்யப்பட்டார்கள்! என்று
திருக்குர்ஆன் எடுத்துரைக்கிறது. மனம்
விரும்பியதையெல்லாம் செய்பவருக்கு, அவரின்
செயலால் பிறருக்கான உரிமைகள்
பறிக்கப்படுகின்றன, பிறருக்குத்
தீங்கிழைக்கப்படுகின்றன என்பதை
உணர்த்தினால் அது பிடிப்பதில்லை. அவர்
அறிவு அதை விரும்புவதுமில்லை. காரணம்:
தன்னலம் மட்டுமே பிரதானமாகக் கருதுவது,
பிறர் நலத்தில் அக்கறை கொள்ளாமல்
இருப்பது.
இவ்வாறு மன இச்சைப்படி வாழ்க்கையை அமைக்க
வேண்டாம் என்றே நபிமார்கள் வழியாக இறைவன்
போதனைகளை வழங்கினான். ஆனால், மன
இச்சையைப் பிரியர்கள், நல்லறங்களைப்
பிரச்சாரம் செய்த நபிமார்களை அநியாயமாகக்
கொலை செய்தும் தொடர்ந்து மன இச்சையிலேயே
நீடித்தார்கள்.
சர்வ வல்லமை படைத்த இறைவன் தன்னடியார்களான
மனிதர்களுக்கு நேர்வழியையும்,
ஆதாரங்களையும் சந்தேகத்திற்கு இடமில்லாமல்
தெள்ளத் தெளிவென தக்க அத்தாட்சிகளுடன்
இறைத்தூதர்களைத் தேர்ந்தெடுத்து மார்க்கப்
பிரச்சாரப் பணிகளை அவர்கள் வழியாக
நிறைவேற்றினான். இந்த வரிசையில் முஹம்மது
(ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டு தூதுப் பணி
அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முந்திய
நபிமார்கள் அநியாயமாகக் கொலை
செய்யப்பட்டது போல், முஹம்மது (ஸல்)
அவர்களையும் கொலை செய்வதற்கான திட்டங்கள்
எதிரிகளால் வகுக்கப்பட்டது.
(நபியே) உம்மைச்
சிறைப்படுத்தவோ, உம்மைக் கொலை செய்யவோ,
(ஊரை விட்டு) உம்மை வெளியேற்றவோ
நிராகரிப்போர் சூழ்ச்சி செய்ததை எண்ணிப்
பார்ப்பீராக! அவர்களும் செய்கின்றனர்,
அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான்.
சூழ்ச்சி செய்வதில் அல்லாஹ் சிறந்தவன்.
(திருக்குர்ஆன், 008:030)
நபி (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில்
மக்காவில் பிரச்சாரம் செய்தபோது, மக்கா
நகரின் பெரும் தலைவர்களெல்லாம் இஸ்லாத்தை
எதிர்த்து தமது விஷமத்தனைத்தை
வெளிப்படுத்தினார்கள். நபியவர்களின்
தந்தையின் சகோதரர் அபூதாலிப் குரைஷிகளின்
செல்வாக்கு மிக்கத் தலைவராக விளங்கியதால்
நபி (ஸல்) அவர்களை எளிதாக நெருங்க
முடியவில்லை
அபூதாலிபின் மரணத்திற்குப் பின் மக்காவில்
இஸ்லாத்தை எதிர்த்தவர்களின் தொல்லைகள்
அதிகரித்தது. அப்போது நபி (ஸல்)
அவர்களுக்கு மதீனாவிலிருந்து அன்சாரித்
தோழர்களின் ஆதரவு கிடைத்தது. நபி (ஸல்)
அவர்களை எப்படியும் கொலை செய்திட -
வேண்டும் என குரைஷித் தலைவர்களும்,
தலைவரின் கட்டளைக்குக் கட்டுப்பட்ட
மக்களும் - கொலை வெறியுடன் அலைந்தார்கள்.
இன்று இரவு முஹம்மதை கொன்று விட வேண்டும்
என்ற எதிரிகளின் திட்டம் அவர்கள்
எதிர்பாரா அளவுக்கு முறியடிக்கப்பட்டது.
மக்காவைத் துறந்து
மதீனாவுக்கு புறப்பட்ட தருணத்திலும்
நபியவர்கள் பேராபத்துகளைச்
சந்தித்தார்கள். வரலாற்றில் இச்சம்பவம்
விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. முஹம்மது
தப்பித்து விட்டார் என்ற செய்தி
பரவியவுடன் குரைஷித் தலைவர்கள் மிகுந்த
ஆத்திரமடைந்து முஹம்மத், அபூபக்ர்
இருவரில் ஒவ்வொருவரின் தலைக்கும் நூறு
ஒட்டகங்கள் பரிசளிக்கப்படும் என
பறைசாற்றினார்கள். அவர்களை உயிருடனோ
அல்லது பிணமாகவோ யார் மக்காவுக்கு
கொண்டு வருகிறார்களோ அவருக்கு இந்தப்
பரிசு என்றும் அறிவிக்கப்பட்டது. (புகாரி)
இதனால்,கால்நடை வீரர்கள், குதிரை
வீரர்கள், காலடித் தட நிபுணர்கள் என நபி
(ஸல் அவர்களையும் அபூபக்ர் (ரலி)
அவர்களையும் மலைகள், பாலைவனங்கள் காடுகள்
பள்ளத்தாக்குகள் என சல்லடை போட்டுத் தேட
ஆரம்பித்தனர்.
எதிரிகளின் தேடல் நேரத்தில் நபியவர்களும்,
அபூபக்ரும் ஃதவ்ர் குகையில் இருந்தனர்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்,
''நான் நபி (ஸல்) அவர்களுடன் குகையில்
தங்கியிருந்தபோது எனது தலையை உயர்த்திப்
பார்த்தேன். அப்போது எதிரிகளின் பாதங்கள்
தெரிந்தன, நான் அல்லாஹ்வின் தூதரே!
அவர்களில் யாராவது தங்களது பார்வையைத்
தாழ்த்தினால் நம்மை பார்த்து
விடுவார்களே'' என்று கூறினேன்.
''அபூபக்ரே! கவலைப்படாதீர்! நம் இருவருடன்
அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கிறான்'' என்று
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நிராகரிப்போர்
இவரை இருவரில் ஒருவராக வெளியேற்றி
போதும், அவ்விருவரும் அக்குகையில் இருந்த
போதும், ''நீர் கவலைப்படாதீர்! அல்லாஹ்
நம்முடன் இருக்கிறான்'' என்று அவர் தம்
தோழரிடம் கூறியபோதும் அவருக்கு அல்லாஹ்
உதவியிருக்கிறான். அமைதியை அவர் மீது
இறக்கியிருக்கிறான். நீங்கள் பார்க்காத
படைகளை கொண்டு அவரைப் பலப்படுத்தினான்.
(திருக்குர்ஆன், 009:040)
இஸ்லாம் மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்த
முந்திய நபிமார்களை கொலை செய்தது போல்
இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்)
அவர்களை எவராலும் கொலை செய்ய
முடியவில்லை! காரணம்: ஏனைய நபிமார்களை விட
முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு
வழங்கப்பட்ட பல சிறப்பம்சங்களில்
மனிதர்களால் அவர்களின் உயிருக்கு எந்த
ஆபத்தும் ஏற்படுத்திட முடியாது என்று
நபியவர்களின் உயிருக்கு உத்திரவாதம்
வழங்கியிருந்தான் இறைவன்.
''தூதரே! உமது
இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை
எடுத்துச் சொல்வீராக! (இதைச்
செய்யவில்லையானால் அவனது தூதை நீர்
எடுத்துச் சொன்னவராக மாட்டீர்! அல்லாஹ்
உம்மை மனிதர்களிடமிருந்து
காப்பாற்றுவான்'' (திருக்குர்ஆன்,
005:067)
மக்களோடு மக்களாக சாதாரணமாக வாழ்ந்த
மாபெரும் தலைவாரக நபி (ஸல்) அவர்கள்
திகழ்ந்தார்கள். நபியவர்கள் பாதுகாப்பு
அரண் எதுவும் அமைத்துக் கொள்ளவில்லை.
அப்படியிருந்தும் எதிரிகளின்
சூழ்ச்சிகளால் நபியவர்களை கொல்ல
முடியவில்லை.
விஷம் வைத்த சம்பவம்.
கைபர் போர் முடிவில் யூதர்கள் விஷம்
கலந்த ஆட்டிறைச்சியை நபி (ஸல்)
அவர்களுக்கு அன்பளிப்பாகக்
கொடுத்தார்கள். விஷம் கலந்த இறைச்சியை
உண்ட நபித்தோழர் பிஷ்ர் பின் பாரா (ரலி)
இறந்து விடுகிறார். நபி (ஸல்) அவர்கள்
இறக்கவில்லை. விஷத்தால் அவர்களுக்கு எந்த
பாதிப்பும் ஏற்படவில்லை. ஏனென்றால்,
மனிதர்களிடமிருந்து நபியை காப்பாற்றுவான்
என்று இறைவன் வாக்களித்திருக்கிறான்.
அதனால் எந்த கொம்பனாலும் நபியவர்களின்
உயிருக்கு ஆபத்தை விளைவித்திட முடியாது.
விஷத்தாலும் நபியவர்களை கொல்ல முடியாது!
ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு கைபர் போர் நடந்தது.
இந்தப் போர் சம்பவத்தையொட்டியே யூதப்
பெண்ணால் விஷம் வைத்த விருந்தும்
வைக்கப்படுகிறது. நபி (ஸல்) அவர்கள் விஷம்
சாப்பிட்டதால் மரணமடைந்தார்கள் என்பது
உண்மையானால் அவர்கள் விருந்து சாப்பிட்ட
இடத்திலேயே மரணமடைந்திருக்க வேண்டும். விஷ
விருந்தை சாப்பிட்ட நபித்தோழர் சம்பவ
இடத்திலேயே மரணித்திருக்கிறார். நபி (ஸல்)
அவர்கள் ஹிஜ்ரி 10ம் ஆண்டு கழிந்து,
ஹிஜ்ரி 11ம் ஆண்டு ஸஃபர் மாதத்தில்
மரணமடைந்தார்கள்.
இதற்கிடையில்...
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இரகசியமாக:
(வானவர்) ''ஜிப்ரீல் என்னை ஒவ்வோர்
ஆண்டும் ஒரு முறை குர்ஆனை ஓதச் செய்து
வந்தார்கள். இந்த ஆண்டு மட்டும் அவர்கள்
என்னை இரு முறை ஓதச்செய்தார்கள். என்
வாழ்நாள் முடிவடையும் நேரம் வந்து விட்ட
(தைக் குறிப்ப) தாவே அதை நான்
கருதுகிறேன்'' என்று தெரிவித்தார்கள்.
(புகாரி) இது ஹிஜ்ரி 10ம் ஆண்டு ரமதான்
மாதம் நடந்த சம்பவம்.
ஹிஜ்ரி 10ம் ஆண்டு ஹஜ்ஜின் போது,
''நீங்கள் உங்களது
ஹஜ் கடமைகளை (என்னிடமிருந்து)
கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான், எனது
இந்த ஹஜ்ஜிற்குப் பிறகு ஹஜ் (செய்வேனா)
மாட்டேனா என்பதை அறிய மாட்டேன்'' என்று
நபி (ஸல்) அவர்கள்
கூறிக்கொண்டிருந்தார்கள். (முஸ்லிம்)
மதீனா பள்ளியில் மிம்பரில் ஏறி, ''நான்
உங்களுக்கு முன் செல்கிறேன். உங்களுக்கு
சாட்சியாளனாக இருப்பேன்'' என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
இன்னும் இதுபோல் நபியவர்களின் பல இறுதி
உபதேசங்கள், நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகை
பிரியும் வேளை நெருங்கி, அவர்களது மரணச்
செய்தி நபியவர்களுக்கு அறிவிக்கப்பட்டது
என்பதை உணர்த்துகிறது.
''இன்றைய தினம்
உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு
செய்து விட்டேன்'' (திருக்குர்ஆன்,
005:003)
இஸ்லாம் நிறைவடைந்து, தூதுப் பணியும்
பூரணமாக நிறைவுப் பெற்று இனி,
இறைத்தூதரின் பிரச்சாரப் பணிக்கு
அவசியமில்லை என்ற நிலையில் முஹம்மது நபி
(ஸல்) அவர்களின் உயிரை இறைவன்
கைப்பற்றினான்.
நபி (ஸல்) அவர்கள் விஷம் சாப்பிட்டதால்
மரணமடைந்தார்கள் என்று பிற மத நண்பர்கள்
கூறுவது வெறும் கட்டுக் கதை!
|